தமிழ் மொழியும் தமிழ் நாடும் மிகவும் பிடிக்கும் - நடிகை சம்யுக்தா

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ் மொழியும், தமிழ்நாடும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

சாய் தரம் தேஜ் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘விரூபாக்‌ஷா’. அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கியுள்ள இப்படத்தில் சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வரும் மே 5ஆம் தேதி தமிழ்நாட்டில் வெளியாக உள்ளது. தமிழ் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுத, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறார்.

இப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இதில் பேசிய நடிகை சம்யுக்தா, ‘எனக்கு தமிழ் மொழியும், தமிழ்நாடும் மிகவும் பிடிக்கும். 'வாத்தி' படத்திற்கு அளித்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து தெலுங்கில் ‘விரூபாக்‌ஷா’ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். ஒரு திரைப்படம் வெளியானால் அதனை ஓடிடியில் காண்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ‘விரூபாக்‌ஷா’ திரையரங்கில் கண்டு மகிழ வேண்டிய படம். ஏனெனில் இது தொழில்நுட்ப ரீதியாக புதிய அனுபவத்தை வழங்கக்கூடியது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் உள்ளிட்டவை திரையரங்கில் மட்டுமே சாத்தியம். இந்த அனுபவம் ஓடிடி மற்றும் சிறிய திரையில் கிடைக்காது’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE