‘ஃபர்ஹானா’ படத்தை திரையிட தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: 'ஃபர்ஹானா' திரைப்படத்தை திரையிட தமிழக காவல் துறை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட தவ்ஹித் ஜமாத் தலைவர் இப்ராஹிம் சபீர் வெளியிட்டுள்ள அறிக்கை: அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் மத ரீதியான பிரச்சினைகளை உருவாக்கத் திரைப்படங்களை எடுத்து அவற்றை திரையிட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதைத் தமிழகக் காவல்துறை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியிடப்பட்ட 'புர்கா' என்ற திரைப்படம் இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடுமையாகத் தாக்கி எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரிதும் மதிக்கக்கூடிய திருக்குர்ஆன் வசனங்களைத் திரையிட்டு, உண்மைக்கு மாறான கருத்துகளை இஸ்லாம் சொல்வதுபோல் புர்கா படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

புர்கா திரைப்படத்தை தொடர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அடுத்து 'ஃபர்ஹானா' என்ற படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் இஸ்லாமியப் பெண்களை அவமதிக்கும் விதமாக இதில் வசனங்கள் வருகின்றன. மேலும் இந்த இரண்டு படங்களிலும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் என்ற ஆடையும் கொச்சைப்படுத்தப்படுகிறது.

புர்கா திரைப்படத்தின் இயக்குநர் சர்ஜுன், நடிகர் கலையரசன், நடிகை மிர்னா, பர்ஹானா பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், நடிகர் செல்வராகவன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மீது தமிழக காவல் துறை சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன், 'ஃபர்ஹானா படத்தைத் திரையிடாமல் தடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE