அதிகாலைக் காட்சிகள் இல்லாத ‘பொன்னியின் செல்வன் 2’ புக்கிங் எப்படி?

By செய்திப்பிரிவு

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு படத்திற்கான புக்கிங் வேகமெடுத்துள்ளது.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால், உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் இரண்டாம் பாகம் நாளை (ஏப்ரல் 28) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்துக்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாளை வெளியாகும் ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’ படத்திற்கான முதல் காட்சி தமிழகத்தில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. காரணம் பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களினால் ஏற்பட்ட அசாம்பாவிதங்களை தவிர்க்க அரசு தரப்பில் அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அண்மையில் வெளியான சிம்புவின் ‘பத்து தல’ தொடங்கி முன்னணி நடிகர்களின் படங்களுக்கே கூட அதிகாலைக் காட்சிகள் அனுமதிக்கப்படவில்லை. காலை 9 மணிக்கு தொடங்கும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கான புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையின் முன்னணி திரையரங்குகளில் டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்று தீர்ந்துவிட்டன. முன்வரிசையில் மட்டும் ஓரிரு இடங்கள் காலியாகியுள்ளன. இதில் விதிவிலக்காக சென்னை மவுன்ட் ரோடு பகுதியில் உள்ள அண்ணா திரையரங்கில் 4 காட்சிகள் திரையிடப்பட உள்ளது. ஆனால், அந்த 4 காட்சிகளிலும் டிக்கெட்டுகள் காலியாக உள்ளன. போலவே, காசினோ, உதயம் திரையரங்குகளிலும் டிக்கெட்டுகள் விற்பனை மந்தமாகவே காணப்படுகிறது. தவிர, சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட்டுகள் பெரும்பாலும் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த நாட்களான சனி, ஞாயிறைத் தொடர்ந்து மே 1 திங்கட்கிழமையும் விடுமுறை தினம் என்பதால் விமர்சனத்தை பொறுத்து கூட்டம் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE