“தமிழில் எனது முந்தைய படத்தின் கதாபாத்திரம் அனைத்தும் சீரியஸாக அமைந்ததுவிட்டது. அதனால் நான் இதுபோன்ற கதாபாத்திரம் மட்டும்தான் நடிப்பேன் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் அனைத்து கதாபாத்திரத்திலும் நடிக்க ஆசையாக தான் இருக்கிறேன்” என நடிகை அதிதி பாலன் தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. பாரதிராஜா, கௌதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் அதிதி பாலன். படத்தில் நடித்தது குறித்து அவர் பகிர்ந்துகொண்டதாவது:
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
இந்தப் படம் எனக்கு உண்மையில் ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. பாரதி ராஜா , தங்கர்பச்சான் போன்ற அனுபவம் மிக்கவர்களிடம் இருந்து எனக்கு சந்தோஷமாக இருந்தது. தங்கர்பச்சானின் வழக்கமான குடும்பம் மற்றும் மனிதர்களின் உணர்வை அடிப்படையாக கொண்ட கதை. முக்கியமாக இந்தப்படத்தில் பெண்ணுக்கும் குழந்தைக்கும் இருக்கும் உறவை சொல்லியுள்ளார். கதையை தாண்டி பெரும் ஆளுமைகளுடன் இணைந்து நான் பணி புரிந்தது மிக மிக நல்ல அனுபவம். அவர்களின் வேலையை பக்கத்தில் இருந்து பார்த்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. பாரதி ராஜா நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை எனக்கு அழகாக சொல்லிக் கொடுத்தார் அது எனக்கு இப்படத்தில் கிடைத்த சிறப்பான அனுபவம்.
இப்படத்தில் உங்களுடைய கதாபாத்திரம்?
கண்மணி எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். படம் பார்த்ததும் அனைவரின் மனதில் பதியும் ஒரு கதாபாத்திரமாக இது இருக்கும். பல கஷ்டங்களை அனுபவித்து, பின் ஒரு மிகப்பெரிய பொறுப்பு கிடைக்கும் போது அதனை எவ்வாறு ஒரு பெண் கையாளுகிறார் என்பதே எனது கதாபாத்திரம். இதற்கு மேல் சொல்லக்கூடாது.
படத்திற்கு ஏன் இந்த தலைப்பு?
பாரதிராஜாவின் கதாபாத்திரத்துக்கும் தலைப்பிற்கும் தான் சம்மந்தம் உள்ளது . அவரின் பயணத்தை வைத்து தான் படம் .
இந்தப் படத்தில் பாரதிராஜா நீதிபதி. கௌதம் மேனன் வக்கீல். யோகிபாபு ஒரு குழந்தையின் மீது அன்பு உள்ளவராக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும்.
இயக்குநர் தங்கர் பச்சானுடன் பணிபுரிந்த அனுபவம்?
தனக்கென என்ன வேண்டுமென்பதில் தெளிவாக இருப்பார். படத்தில் எனக்கான இடத்தை தந்திருக்கிறார், என் மீது கோவப்பட்டதில்லை. எனக்கு இந்தப்படம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தங்கர் பச்சானோடு வேலை பார்ப்பது கஷ்டம் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கு அது போன்று தோணவே இல்லை. இந்தப்படம் அவவளவு அழகிய நினைவுகளை தந்துள்ளது.
நீங்கள் நடிப்பிற்கு வந்த பிறகு வக்கீல் தொழிலில் மீண்டும் வாய்ப்பு வந்ததா?
இல்லை . நடிப்பிற்கு வந்த பிறகு எனக்கு அது போன்ற வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. ஆனால் அந்த வேலையை நான் சில வருடங்கள் கழித்தும் செய்யலாம் என்றிருக்கிறேன். ஆனால் இப்போதைக்கு நடிப்பிற்கு தான் முக்கியத்துவம். நல்ல நல்ல படங்கள் செய்ய வேண்டும்.
அருவி படத்தில் உங்களால் மறக்க முடியாத அனுபவம்?
எனக்கு அது முதல் படம் அதனால் அதிக பயம் இருந்தது. நடிக்க பயம் இல்லை ஆனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்து விட கூடாது. நம்மால் பிறரது வேலை பாதிக்க கூடாது என பயமாக இருந்தது. நான் கொஞ்சம் கவனமாகவே நடித்தேன். அந்த படத்தில் கிடைத்த கதாபாத்திரம்தான் என்னை இந்த அளவிக்கு கொண்டு வந்திருக்கிறது. இப்போது 'கருமேகங்கள் கலைகின்றன' மிகுந்த நம்பிக்கை தருகிறது.
கௌதம் மேனன் உடன் நடித்த அனுபவம் எப்படி ?
அவருடன் எனக்கு ஒரு காட்சி மட்டும் தான் இருந்தது. அவர் பெரிய மெனக்கிடல் எல்லாம் இல்லாமல் சுலபமாக ஒரு காட்சியை அழகாக்கி விடுகிறார், எனக்கு சில அறிவுரைகள் கூறினார். அவருடன் வேலை செய்த அனுபவம் அருமையாக இருந்தது. நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.
ஏன் தமிழில் அதிக படம் நடிப்பதில்லை ?
எனக்கும் காரணம் தெரியவில்லை. எனது முந்தைய படத்தின் கதாபாத்திரம் அனைத்தும் சீரியஸாக அமைந்ததுவிட்டது. அதனால் நான் இது போன்ற கதாபாத்திரம் மட்டும் தான் நடிப்பேன் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் அனைத்து கதாபாத்திரத்திலும் நடிக்க ஆசையாக தான் இருக்கிறேன். தவிர, என்னை பொதுவெளியில் வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் இல்லை. இனிமேல் நிறைய நடிக்க முயற்சிக்கிறேன்.