ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறிய நடிகர் சிம்பு

By செய்திப்பிரிவு

நடிகர் சிலம்பரசன் இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். பின்பு அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து தன் கையாலேயே பரிமாறியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் உடல் எடை காரணமான நடிகர் சிம்பு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். இதையடுத்து தீவிர உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைத்த சிம்புவின் நடிப்பில் 2021-ம் ஆண்டு ‘ஈஸ்வரன்’ படம் வெளியானது. படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த ‘மாநாடு’ சிம்புவுக்கு மிகப் பெரிய கம்பேக்காக அமைந்தது. அடுத்து கடந்த ஆண்டு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று தந்தது.

இதையடுத்து கடந்த மார்ச் 30-ம் தேதி சிம்புவின் ‘பத்து தல’ படம் வெளியாகி அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது பேசிய நடிகர் சிம்பு, ‘இனி ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்களில் நடிப்பின்; நீங்க இனி கவலைப்பட வேண்டாம்’ என பேசியிருந்தார். ‘பத்து தல’ படம் நல்ல வரவேற்பை பெற்றதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தரப்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொடர் படங்களின் வெற்றியால் குஷியிலிருக்கும் சிம்பு இன்று சென்னையில் ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறியிருக்கிறார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார் சிம்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE