சென்னை: ‘விடுதலை’ படம் ஒரு திரைக்காவியம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்கள் கொண்ட இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.
இந்தப் படம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ‘விடுதலை’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘விடுதலை’ இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு -பிரமிப்பு. இளையராஜா -இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் - தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.