நம் மண்ணையும் மனித உறவையும் கிராமத்து வாசனையோடு தன் பாடல்களில் குழைத்துத் தருபவர், பாடலாசிரியர் ஏகாதசி. அவருடைய ‘ஆத்தா உன் சேலை...’, ‘ஒத்த சொல்லால’, ‘கோணக் கொண்டைக்காரி’, ‘கம்பத்துப் பொண்ணு’ உட்பட பல பாடல்களை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். இப்போது விக்ரம் சுகுமாரன் இயக்கியிருக்கும் ‘இராவணக் கோட்டம்’ உட்பட பல படங்களுக்கு பாடல் எழுதியிருக்கும் ஏகாதசி, சுமார் 300 திரையிசைப் பாடல்களும் 500 தனியிசைப் பாடல்களும் எழுதியிருக்கிறார். இவர் திரைப்பட இயக்குநரும் கூட.
“இயக்குநர் ஆகும் ஆசையிலதான் வந்தேன். உடனே அதுக்கான வாய்ப்பு கிடைக்கலை. காலம் அதுபோக்குல நம்மை தள்ளிட்டுப் போகுது. நாமும் அதுகூட ஓடத்தான் வேண்டியிருக்கு. அப்படித்தான், ‘ஆயுள் ரேகை’ங்கற படத்துல பாடல் எழுதும் வாய்ப்பு கிடைச்சது. அதுதான் முதல் பாடல். பிறகு மீரா கதிரவன் இயக்கிய ‘அவள் பெயர் தமிழரசி’ படம் மூலமா கவனிக்கப்பட்டேன். அதுல 5 பாடல்கள் எழுதினேன். எல்லாமே வரவேற்பைப் பெற்றது. பிறகு தொடர்ந்துபாடல்கள் எழுத வாய்ப்பு வந்தது” என்கிறார் ஏகாதசி.
சில பாடலாசிரியர்களுக்கு சில இசை அமைப்பாளர்களோட சேர்ந்தா, பாடல்ல மேஜிக் நடக்கும்னு சொல்வாங்க. உங்களையும் ஜி.வி.பிரகாஷையும் அப்படி சொல்லலாமா?
எனக்குத் தெரியல. ஆனா, அவர் இசையில நான் எழுதிய பாடல்கள் எல்லாமே கவனிக்கப்பட்டிருக்கு. அவர்இசை அமைப்பாளரா அறிமுகமான ‘வெயில்’ படத்துல ஒருசின்ன பாடல் எழுதினேன். அதுல இருந்தே, என் எழுத்துமேல அவருக்கு மரியாதையும் நம்பிக்கையும் இருக்கு. மக்களின் வழக்குலஇருந்து, கிராமத்து இலக்கியமா என் வார்த்தைகள் இருக்கிறதால அவர் ரொம்ப விரும்புவார். ‘ஆடுகளம்’ படத்துல ‘ஒத்த சொல்லால’, விக்ரம் சுகுமாரன்இயக்கிய ‘மதயானைக் கூட்டம்’ படத்துல, ‘கோணக் கொண்டைக்காரி’, ‘சூரரைப் போற்று’ படத்துல ‘மண்ணுருண்டை மேல’, அசுரன்ல ‘கத்திரிப்பூ’ன்னு அவர் இசையில பல பாடல்கள் எழுதியிருக்கேன். எல்லாமே கவனிக்கப்பட்டிருக்கு. அடுத்தும் எழுதிட்டு இருக்கேன். அவர் இசையில் எழுதறது எனக்கு ரொம்ப பிடிக்கும்.
» IPL | ‘சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்’ - டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர்!
» "முதுகெலும்பு இல்லாமல்தான் காங்கிரஸில் இருக்க வேண்டும்": குலாம் நபி ஆசாத்
ஒரு படத்துல 20, 30 பாடல்கள் இருந்த தமிழ் சினிமாவுல, இன்னைக்கு ஒரு பல்லவி,ஒரு சரணத்தோட பாடல்கள் முடியுதே?
அது தவிர்க்க முடியாது. இது யதார்த்தமானதுதான். ஒரு படம் நேர்மையாக்கப்படணும்னா, தவிர்க்க வேண்டிய இடத்துலதான் பாடல்கள் இருக்கு. இல்லைனா, ‘மான்டேஜ்’ல பாட வேண்டியிருக்கு. ஒரு காட்சியில, வசனத்தால வெளிப்படுத்த முடியாத உணர்வை, பாடல் மூலமா கொடுக்கணும். அதுதான்பாடல் செய்ற வேலைன்னு நினைக்கிறேன். தனியிசை பாடல்கள் அதிகமானால், அவை கவனிக்கப்பட்டா இந்தப் பிரச்சினை வராது. தனியிசை பாடல்களை பரவலா மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகள் நடந்தா அது சரியா வரும். திரைப்படங்களில் பாடல்கள் குறைவது யதார்த்தம்தான்.
‘அப்ப இருந்த பாட்டு மாதிரி இப்ப இல்லை’ங்கற கருத்து பொதுவா உலவிக்கிட்டு இருக்கு... நீங்க என்ன சொல்றீங்க?
இதுக்கு நான் உடன்படலை. எல்லா காலத்துலயும் இப்படியொரு கேள்வி இருந்துட்டேதான் இருக்கும். இளையராஜா வந்த புதுசுல, அவர் இசையை விமர்சிச்சாங்க. ஏ.ஆர்.ரஹ்மான் வந்தப்பவும் அப்படித்தான். நவீனத்தை, புதிய வரவை எதிர்கொள்ள முடியாதவங்க, அல்லது அப்டேட் ஆகாதவங்க அதை குறையா சொல்றாங்க. அந்தந்த காலகட்டத்துல இளைஞர்களால கொண்டாடப்படற, ரசிக்கப்படற இலக்கியம், பாடல்கள் சரியானதுதான்னு நினைக்கிறேன்.
‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘அருவா’-ன்னு 2 படங்கள் இயக்கி இருக்கீங்க...
ஆமா. முதல்லயே சொன்ன மாதிரி, நான் இயக்குநரா ஆகணும்னுதான் வந்தேன். பிறகு பாடலாசிரியர் ஆயிட்டேன். என்னை வெளியில காட்டிக்காமத்தான் இருந்தேன். எதுல அடையாளப் படறோமோ, அதைதான் இங்கவிரும்புவாங்க. பாடலாசிரியரா இருக்கிறவங்க படம் இயக்கமுடியாத போக்குதான் இருக்கு. ஒரு கவிஞனால வெகுஜன சினிமா எடுக்க முடியாதுங்கற மனநிலையிலதான் சிலர் இருக்காங்க. எனக்கு முன்னால இயக்குநர் ஆசையில் இருந்த அறிவுமதி, கலைக்குமார், நா.முத்துக்குமார் இவங்கள்லாம் பாடலாசிரியர்களாவே இருந்துட்டாங்க. அவங்க நினைச்ச இயக்குநர் சீட்டுக்கு போக முடியலை. அதனால எனக்கும் அந்த நிலை வந்துடக் கூடாதுன்னு நினைக்கிறேன். ரெண்டு படம் இயக்கிட்டேன்னு சொன்னாலும் இன்னும் நிறைய கதைகளைச் சொல்லணும்னு விருப்பம் இருக்கு. அடுத்தும் சிறப்பான கதையை தயார் பண்ணி வச்சிருக்கேன். தயாரிப்பாளரைத் தேடிட்டு இருக்கேன். இயக்குநராகவும் பாடலாசிரியராகவும் என் பயணம் தொடரணும்னு நினைக்கிறேன்.