‘மதயானைக் கூட்டம்’ இயக்குநரின் ‘இராவண கோட்டம்’ பட ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சாந்தனு நடித்துள்ள ‘இராவண கோட்டம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. ‘மதயானைக் கூட்டம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கும் படம் ‘இராவண கோட்டம்’. சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இதில் ஆனந்தி, பிரபு, சத்யா என்.ஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: ஒப்பாரி பாடலுடன் படத்தின் ட்ரெய்லர் தொடங்குகிறது. ‘சாவு எங்கள குறிப் பாத்திருக்குறது தெரியாம கபடி விளையாட்டி இருந்தோம்’ வசனத்துடன் தொடங்கும் காட்சிக்குப் பின்னர் காதல் ஆசுவாசப்படுத்துகிறது. தொடர்ந்து வரும் ‘இரண்டு சாதிக்கு நடந்த கலவரம்’ என்ற டயலாக் படம் தென்மாவட்டங்களின் சாதிய பிரச்சினையை கையிலெடுத்திருப்பதை உணர்த்துகிறது. அடுத்தடுத்து துப்பாக்கிச் சத்தம், சண்டை, ரத்தம் என நீளும் சண்டைக் காட்சிகள் என மொத்த ட்ரெய்லரில் பெரிய அளவில் புதுமை தென்படவில்லை. படத்தின் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ட்ரெய்லர் வீடியோ;

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE