“பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தையே நான் இன்னும் பார்க்கவில்லை” என படத்தில் நடித்த நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பார்த்திபன், “என்னைப்போல அழகாக தமிழ் பேசுபவர்களுக்கு ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் வாய்ப்பு கிடைப்பது மிகப் பெரிய விஷயம். அந்த சந்தோஷத்தில் நெஞ்சில் வாள் ஏந்தி வந்திருக்கிறேன். சராசரி ரசிகர்களைப்போல நானும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்காக காத்திருக்கிறேன்.
படத்தின் முதல் பாகம் எப்படியிருந்தது என எனக்குத் தெரியாது. ஏனென்றால் முதல் பாகத்தையே நான் இன்னும் பார்க்கவேயில்லை. முதல் நாள் முதல் ஷோ தஞ்சாவூரில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு அங்கு சென்று ரசிகர்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டு படத்தை பார்க்க முடியாமல் போனது. அது ஆச்சரியமான செய்தி. ஆகவே, முதல் பாகத்தில் என்ன இருந்தது எனக்குத் தெரியாது. இரண்டாம் பாகத்தில் என்ன இருக்கும் எனவும் தெரியாது. ஆனா, இந்தப் படத்தில் நான் இருக்க வேண்டும் என்பது மட்டும் எனக்கு சந்தோஷம்.
முதல் பாகத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்து. அது இரண்டாம் பாகத்திலும் கிடைக்கும் என நம்புகிறேன். எல்லா படங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது அவசியம். வரலாற்று படங்களுக்கு மட்டுமல்ல; சராசரி படங்களுக்கும் வரலாறு படைக்கும் அளவுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என்றார் பார்த்திபன்.