“எனக்கும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கும்எந்த நேரடித் தொடர்பும் இல்லை” என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் வரும் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தொடர்பாக பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், “கண்ணை நம்பாதே 2018-ம் ஆண்டு தொடங்கிய படம். நெடிய போராட்டம்; நெடும் பயணத்தைத் தாண்டி படம் திரைக்கு வர உள்ளது. படம் அதீத நாட்கள் எடுத்துகொண்டது. நான்கரை ஆண்டுகால உழைப்பில் உருவான இப்படம் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும்” என்றார்.
தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகும் முடிவு குறித்து கேட்டதற்கு, “படங்களில் நடிப்பதை நிறுத்துமாறு கூறியது பெற்றோர்கள்தான். அம்மாவுக்கு தொடக்கத்திலிருந்தே நான் சினிமாவில் இருப்பதில் பெரிய விருப்பமில்லை. மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம். குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு தான். தற்போது அமைச்சராகிவிட்டதால் அது ஒரு முழுநேர மக்கள் பணியாற்ற வேண்டிய சூழலிருக்கிறது. அதனால் ‘மாமன்னன்’ படத்துடன் முடித்து விடலாம் என நடிப்பை நிறுத்தி விட்டேன்.
நான் ரெட் ஜெயன்டிலிருந்து வெளியே வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. எனக்கும் ரெட் ஜெயன்டுக்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது. இந்தப் படத்தையும் அவர்கள்தான் வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு நன்றி. இளைஞர்கள் அரசியல் பேசுங்கள்; சினிமாவை சினிமாவாக பாருங்கள். வதந்திகளை உடனே நம்பிவிடாதீர்கள்” என்றார் அமைச்சர் உதயநிதி.