“அயோத்தி திரைப்படம் ஆகச்சிறந்த படைப்பு” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.
மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவான ‘அயோத்தி’ திரைப்படம் வெகுஜன மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு பேசிய சீமான், “அயோத்தி படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். படத்தில் பாட்டு ஒன்றில், “மனம் அன்பில் பூக்கம்போது மதம் தெய்வமெல்லாம் ஏது?” என கேட்கிறார். அது தான் படம். மதத்தை தாண்டியது மனிதம் என்பதை சொல்லும் படம்தான் இது.
தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படம் அயோத்தி. இப்படியான ஒரு படத்தை மக்கள் கொண்டாட வேண்டும். இல்லாவிட்டால் இப்படியான அரிய படைப்பு வாய்க்கப் பெறுவது கடினம். சசிகுமாருக்கு இது புதிய பாய்ச்சலாக இருக்கும். படத்தில் உரையாடலும் நேர்த்தியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் பார்த்து கொண்டாடப்பட வேண்டிய படம். தவறாமல் பாருங்கள். படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.