“கனவு நனவானது” - கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சிம்பு மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சிம்பு நடிக்கும் புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு, ஓபிலி கிருஷ்ணாவுடன் இணைந்து ‘பத்து தல’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்!” என பதிவிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கனவு நனவானது” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE