இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் சமீப காலமாக தனது ட்வீட்டுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரின் அனுபவம் பொருந்திய அந்த ட்வீட்டுகள் குறித்து பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக முத்திரை பதித்த செல்வராகவன், ‘பீஸ்ட்’, ‘சாணிக்காயிதம்’, ‘பகாசூரன்’ படங்கள் மூலமாக நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இந்நிலையில், அவர் சமீபகாலமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அனுபவத்தை ட்வீட்டுகளாக பதிவிட்டு வருகிறார். அவரின் அந்த ட்வீட்டுகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று, “பணம் கையில் வந்தால்தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம்! அனுபவம். தத்துவம் அல்ல” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அவர், “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது... எங்கு போய் நட்பை தேடுவேன்” என தெரிவித்திருந்தை பலரும் ஆமோதித்து ஷேர் செய்திருந்தனர்.
கடந்த ஜனவரி 31-ம் தேதி அவர் ட்விட்டர் பக்கத்தில், “எல்லோரும் சொல்வது... சொத்து இருந்தால்தான் நாலு பேர் மதிப்பார்கள்! அந்த நாலு பேர் மதிக்காவிட்டால்தான் என்ன? வாழ்க்கையில் மிக முக்கியம் நம்மை நாம் மதிக்க வேண்டும்! மற்றபடி சோறு தங்க தட்டில் சாப்பிட்டால் என்ன வெறும் இலையில் சாப்பிட்டால் என்ன? ருசி அதேதான்” என பதிவிட்டிருந்தார்.
ஜனவரி 23-ம் தேதி, “கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது ஒரு வகை. வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் எங்கெங்கோ அலைந்து திரிந்து , நுனியளவு ஊசிக் கயிற்றில் தொங்கி , ஏதோ தூசி போல தெரியும் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறிக் காட்டுவதுதான் உலகமே கைதட்டும் சாதனை” என தெரிவித்திருந்தார். இப்படியான அவரின் ட்வீட்டுகளுக்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன.