அயலி அபி நட்சத்திராவுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் - சுசீந்திரன்

By செய்திப்பிரிவு

ஜீ 5 தளத்தில் வெளியான 'அயலி' இணையதொடர் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத் தனது 'எஸ்ட்ரெல்லாஸ் ஸ்டோரீஸ்' நிறுவனத்தின் சார்பில் எஸ்.குஷ்மாவதி தயாரித்திருந்தார். முத்துக்குமார் இயக்கிய இத்தொடரில் அபி நட்சத்திரா, அனுமோள், மதன், லிங்கம், சிங்கம்புலி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தத் தொடரில் பங்கேற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் விழா சென்னையில் நடந்தது.

விழாவில், இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, "இதன் கதை, கொஞ்சம் தவறி இருந்தாலும் ஆவணப் படமாக மாறி இருக்கும். அதை சுவாரசியமாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக உருவாக்கியிருந்தார் இயக்குநர். நாயகியாக நடித்திருந்த அபி, அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார். நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும். தொடரை தயாரித்த குஷ்மாவதியை பாராட்ட வேண்டும். இதுபோன்ற ஒரு கதையைத் தயாரிக்க நினைப்பதற்கே ரசனை, தைரியம் வேண்டும். நான் ‘வெண்ணிலா கபடிக்குழு’ கதையை பலரிடம் கூறினேன். யாருக்கும் அது புரியவில்லை. ‘வெண்ணிலா கபடிகுழு’ தயாரிப்பாளர் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன். அதனால் அந்தக் கதை அவருக்குப் புரிந்தது, அதனால் தயாரித்தார். சினிமாவில் அந்த புரிதல் மிக முக்கியமானது" என்றார்.

இயக்குநர்கள் பாரதிராஜா, பாண்டிராஜ், சுசீந்திரன் கலந்து கொண்டனர். பாரதிராஜா நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE