இயக்குநர் சுதா கொங்கராவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் இயக்கி வரும் ‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்திற்கு தேசிய விருதுகளும் வழங்கப்பட்டது. தமிழில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து இந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சூர்யா இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
இப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் தான் இசையமைக்கிறார். படத்தின் இசையமைப்பு அண்மையில் தொடங்கியதாக அவரே தெரிவித்திருந்தார். இந்நிலையில், இயக்குநர் சுதா கொங்கராவிற்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. கையில் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்துடன், “வலி மிகுதியாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பு இல்லை. எனக்கு தேவையில்லாத பிரேக் இது” எனப் பதிவிட்டுள்ளார்.