பாகுபலி கதாசிரியர் கதையில் லாரன்ஸ்: முதற்கட்ட பணிகள் துவக்கம்

By ஸ்கிரீனன்

'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் கதையின் நாயகனாக லாரன்ஸ் நடிக்கவுள்ளார். முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

உலகளவில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் 'பாகுபலி' படத்தின் கதையை எழுதியவர் இயக்குநர் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்.தற்போது 'நாயக் 2' மற்றும் 'ரவுடி ரத்தோர் 2' ஆகிய படங்களுக்கான கதைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு முன்பாக 18 மற்றும் 19 நூற்றாண்டுகளில் நடைபெறும் கதையொன்றை எழுதி முடித்துள்ளார் விஜயேந்திர பிரசாத். இக்கதையின் நாயகனாக லாரன்ஸ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

இதனை ராஜமெளலியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மகாதேவ் இயக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கதையின் நாயகியாக காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது படக்குழு. அட்லீ - விஜய் படத்துக்காக வெளிநாட்டில் இருக்கும் அவர் இந்தியா திரும்பியவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்கள்.

தற்போது தான் நடித்து இயக்கவுள்ள படத்தின் கதையை இறுதிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் லாரன்ஸ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE