சென்னை: அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் "ஒரு நல்ல நண்பனை இன்று நான் இழந்திருக்கிறேன். ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர் உயிரிழந்ததை அடுத்து, நடிகர் ரஜினிகாந்த் அவரது உடலுக்கு, அண்ணாநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "சுதாகர் என்னுடைய நீண்டகால நண்பர். என்மேல் நிறைய அன்பு, பாசம் வைத்திருந்தார். அவருக்கு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லை. நிறைய மருத்துவமனைகளில் அவரது உடல்நிலையை சரிசெய்ய முயற்சித்தோம்.
ஆனால், நம்மைவிட்டு இவ்வளவு சீக்கிரம் பிரிந்து செல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும். என்னுடன் அவர் பயணித்த நினைவுகள் நிறைய உள்ளது. நான் நன்றாக இருக்க வேண்டும் என எப்போது பார்த்தாலும் அவருக்கு என்னைப் பற்றித்தான் யோசனை. அப்படி ஒரு நல்ல மனிதர். ஒரு நல்ல நண்பனை இன்று நான் இழந்திருக்கிறேன். ரொம்ப மனசு கஷ்டமாயிருக்கு" என்று அவர் கூறினார்.