“காந்தியிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக ‘ஹே ராம்’ படத்தை இயக்கினேன்” - கமல்ஹாசன்

By செய்திப்பிரிவு

“மகாத்மா காந்தியிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக ‘ஹே ராம்’ படத்தை இயக்கினேன்” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுடன் தான் நடத்திய உரையாடல் வீடியோவை காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி யூடியூபில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சினிமா, அரசியல் குறித்து இருவரும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளனர். இதில், மகாத்மா காந்தியின் சிந்தாந்தம் மீதிருந்த தனது மாற்றுக் கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் விதமாகத்தான் ‘ஹே ராம்’ படத்தை இயக்கியதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “நான் இளம் பருவத்திலிருந்தபோது எனது சூழ்நிலை மகாத்மா காந்தியை கடுமையாக விமர்சிக்க வைத்துவிட்டது. அப்போது என் தந்தை என்னிடம் வரலாற்றை படிக்கச் சொன்னார்.

வழக்கறிஞராக இருந்த என் தந்தை, என்னிடம் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க விரும்பவில்லை. சுமார் 24-25 வயதில் நான் காந்திஜியை சுயமாக படித்து அறிந்துகொண்டேன். அதன்பின் நான் அவரின் ரசிகனாகிவிட்டேன். என்னைத் திருத்திக்கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் நான் ‘ஹே ராம்’ படத்தை இயக்கினேன். காந்திஜியைக் கொல்ல விரும்பும் ஓர் இணை கொலையாளியாக நானும் படத்தில் நடித்திருந்தேன். காந்திக்கும், உண்மைக்கும் அருகில் அந்த கொலையாளி செல்ல செல்ல மாறிவிடுகிறார். ஆனால், அது மிகவும் தாமதமான மாற்றம். அவர் செய்ய நினைத்த காரியத்தை மற்றொருவர் செய்துவிடுவார். இருப்பினும் அங்கே அவரின் மன மாற்றம் நிகழ்ந்துவிடும்படி கதை அமைக்கப்பட்டிருக்கும். இதுதான் ‘ஹே ராம்’ படத்தின் கதை. இதை மன்னிப்பு கேட்கும் வழியாக நான் கருதினேன்” என்றார். கலந்துரையாடல் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE