தேவையான விமர்சனமும், தேவையில்லாத எதிர்ப்பும்... - ‘வாரிசு’ விழாவில் நடிகர் விஜய் பேச்சு

By செய்திப்பிரிவு

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, "வாய்பு கிடைக்கிறபோதெல்லாம் நன்றி சொல்லி கொண்டே இருக்கணும். என்னை உருவாக்கிய உளிகளுக்கு என் நன்றிகளும் வணக்கங்களும். வம்சி கதையை முதல் முறையே நடிகர்கள் ஓகே பண்ணிடுவாங்க. ஆனா, எந்த டேக்கும் அவர் ஒரு தடவையில் ஓகே சொன்னது இல்ல. அதாவது அவர் தனக்கு வேண்டிய காட்சிகளை கச்சிதமாக எடுப்பார். எஸ்.ஜே.சூர்யா மற்றும் குஷ்புவுக்கு ஸ்பெஷல் நன்றி. சிறிய வேடங்கள் என்றாலும் இந்தப் படத்தில் நடிக்க முன்வந்தனர். எஸ்.ஜே.சூர்யாவின் வளர்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு நிறைய கனவுகள் உள்ளன. விரைவில் அது நிறைவேறும். நடிகர் ஷாம் குஷி படத்தில் இருந்து எனது நண்பர்.

அன்பு தான் உலகத்தை ஜெயிக்க கூடிய ஒரு விஷயம். ரசிகர்களின் அன்பே எனக்கான போதை. அன்பே என்பது உலகின் மிகப்பெரிய ஆயுதம். விஜய் மக்கள் இயக்கம் ரத்த தானம் செய்வது பெருமையாக இருக்கிறது. எனது ரசிகர்களின் இரத்த தானம் பற்றி நான் நீண்ட காலமாக பேச விரும்பினேன். இனம், மதம், ஜாதி, வேறுபாடுகள் இல்லாத ஒரே விஷயம் ரத்தம். குறைந்த பட்சம் இந்த ஒரு நல்ல குணத்தையாவது நாம் இரத்தத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இரத்த தானம் செய்வதற்கான செயலியை ஆரம்பித்துள்ளேன். நான் அறிமுகப்படுத்திய செயலி மூலம் 6000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்த தானம் செய்துள்ளனர். இதை சாத்தியமாக்கிய எனது வழிகாட்டிகள், குழு உறுப்பினர்கள் மற்றும் எனது ரசிகர்களுக்கு நன்றி.

யாராவது உங்களை எதிர்த்து பிரச்சனை வந்தால், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். தேவையான விமர்சனமும், தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை வாழவைக்குது.

1990களில் ஒரு நடிகர் போட்டியாளராக வந்தார். அவர் எனக்கு எதிராக நின்றார். நான் எங்கு சென்றாலும் அவர் வந்தார். அவரின் வெற்றியால் நானும் கடினமாக ஓடினேன். நான் அவரை விட வெற்றிபெற விரும்பினேன், அத்தகைய போட்டியாளர் நம் அனைவருக்கும் தேவை. அந்த போட்டியாளர் உருவான ஆண்டு 1992. அவர் வேறு யாருமல்ல, அவர் பெயர் ஜோசப் விஜய். ஆம், எனக்கு நானே போட்டியாளர். உங்களுக்கு எப்போதும் ஒரு போட்டியாளர் தேவை. முதலில் உங்களுடன் போட்டியிடுங்கள், உங்களுக்கு நீங்களே சொந்த போட்டியாக இருங்கள்" என்றவர், "வாரிசு உறவுகளைப் பற்றிய படம் அதனால் அதைப் பற்றி ஒரு குட்டி கதை. ஒரு தந்தை, அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு சாக்லேட்களின் கதை." என்று குட்டிக்கதை ஒன்றை கூறினார்.

முன்னதாக, மேடையில் தயாரிப்பாளர் வம்சியை கலாய்த்தார் நடிகர் விஜய். மேடையில் பேசும்போது, "தயாரிப்பாளர் தில் ராஜூவை வாரிசுக்காக வாழ்த்துகிறேன். அதாவது பிறந்த குழந்தையை சொல்கிறேன். அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அதற்கு எனது வாழ்த்துக்கள்" என்று சொன்னவர், அடுத்து "வாரிசு 2 எப்போ சார்?, இப்போ நான் படத்தை பற்றி கேட்டேன் சார்" என்று கலாய்த்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE