வெற்றிமாறன் கருத்து குறித்து மணிரத்னத்திடம் கேளுங்கள்: சரத்குமார்

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி: ''இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருக்கும் கருத்து குறித்து என்னிடம் கேட்காதீர்கள்'' என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், ''பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த கேரக்டருக்கு சரத்குமார் தான் பொருந்துவார் என்கிற எண்ணம் மணிரத்னத்திற்கு உதித்தது மிகப்பெரிய விஷயம். வாய்ப்பளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பார்த்து பலரும் எனக்கு போன் செய்தார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் அனைவர் மத்தியிலும் சென்றடைந்திருக்கிறது'' என்றார்.

மேலும், ''குறை சொல்பவர்கள், அந்தக் குறையை இயக்குநரிடம் சென்று இப்படி சித்தரித்து இருக்கிறீர்களே என்று கேட்க வேண்டும். தவறு இருக்கிறது என்றால் இயக்குநரிடம் சொல்ல வேண்டும். வெற்றிமாறன் கருத்து பதிவு செய்திருக்கிறார். இது சுதந்திர நாடு. யார் என்ன கருத்து சொல்ல விரும்புகிறார்களோ சொல்ல உரிமை இருக்கிறது. இது ஜனநாயக நாடு. அவர் கருத்து சொல்லி இருக்கிறார் என்றால் அதை யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம் போய் கேட்க வேண்டும்.

என்னைப் பார்த்து அந்த கருத்தை கேட்டால் நான் சொல்லும் கருத்து ஏற்றுக்கொள்ளப்படுமா? படத்தில் நடித்ததினால் என்னிடம் கேட்க வேண்டுமா? இயக்குநரிடம் சென்று கேளுங்கள். இப்படி சித்தரிக்கப்பட்டது தவறு என்று நினைக்கிறோம். இப்படி படத்தில் சொல்லி இருக்கிறீர்கள் என்று நீங்கள் ஜெயமோகனிடம் கேளுங்கள். பிறகு நான் பதில் சொல்கிறேன்'' என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE