அடுத்த மாதம் தொடங்கும் டிமான்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

'டிமான்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என படத்தின் நாயகன் அருள்நிதி தெரிவித்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மு.க. தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது.

இந்தப் படத்துக்குப் பிறகு முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் அஜய் ஞானமுத்து. சுமார் 7 ஆண்டுகள் கழித்து இதன் 2-ம் பாகத்தில் அருள்நிதி நடிக்கவுள்ளார். அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கி என்பவர் கூறிய கதை அருள்நிதிக்கு மிகவும் பிடித்துள்ளது.

ஆகையால், அந்தக் கதையினை ‘டிமான்ட்டி காலனி 2’ என்ற பெயரில் படமாக்க முடிவு செய்துள்ளார் அருள்நிதி. முதல் பாகத்தின் கதைக்கும், இரண்டாம் பாகத்துக்கும் சம்பந்தம் கிடையாது என்கிறார்கள். இந்நிலையில், ட்விட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அருள்நிதி 'டிமான்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE