‘பத்து தல’ படப்பிடிப்பில் சிம்பு தீவிரம்; டிசம்பரில் படம் ரிலீஸாக வாய்ப்பு

By செய்திப்பிரிவு

நடிகர் சிம்பு 'பத்து தல' படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். இதையடுத்து, இந்தாண்டு இறுதியில் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

'சில்லுன்னு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட படங்களை இயக்கி ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'பத்து தல'. பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், மலையாள நடிகை அனு சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, கலையரசன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி என பலரும் நடிக்கின்றனர்.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஷூட்டிங் இன் ப்ராக்ரஸ்.. பத்து தல' என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், 'பத்து தல' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ளார். இந்தப் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்து முடிந்துள்ளது.

படத்தின் இரண்டாம் கட்டப்படிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இதில் நடிகர் கௌதம் கார்த்தி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நடிகர் சிம்புவும் அடுத்த இரண்டு நாட்களில் படத்தொகுப்பில் கலந்து கொண்டு தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை தொடருவார் என கூறப்படுகிறது.அடுத்த இரண்டு வாரங்களுக்கு படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரியா பவானி சங்கரை பொறுத்தவரை அவர் தற்போது ஐரோப்பா ட்ரிப் சென்றுள்ளார். அவர் திரும்பியதும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தனக்கான காட்சிகளில் நடிக்க உள்ளார். படத்தை செப்டம்பருக்குள் முடித்து, இந்த வருட இறுதியில் திரையில் வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE