கைதி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள படம் 'விருமன்'. 2டி என்டர்டெயின்ட்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் வரும் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதற்கான புரோமோஷன் விழாக்களில் பங்கேற்ற நடிகர் கார்த்தி கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதிசெய்தார். மேலும் 2023ல் கைதி படப்பிடிப்பு தொடங்கலாம் என்றும் வெளிப்படுத்தினார். 2019ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திலும் கைதி படத்தில் கார்த்தியின் கேரக்டரான டில்லியின் டச் இருந்தது.
இதையடுத்து கைதி இரண்டாம் பாகம் குறித்து பேசப்பட்டுவந்த நிலையில் அதனை கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், "விஜய்யின் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் லோகேஷ் முடித்தவுடனே கைதி படப்பிடிப்பு தொடங்கும். 2023ம் ஆண்டுக்கு மேல் படப்பிடிப்பு தொடங்கலாம்" என்றும் கார்த்தி தகவல் தெரிவித்தார்.
» ஆக்ஷனில் மிரட்டும் அதர்வா: வெளியானது Trigger டீசர்
» ‘குறையாத ஆன்மா!’ - நெட்டிசன்களின் பார்வையில் ‘லால் சிங் சத்தா’
அதேபோல், தனது சகோதரரான நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த கார்த்தி, "ரோலக்ஸ் டில்லியை சந்திப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. அதை லோகேஷ் தான் சொல்ல வேண்டும். அதற்கு என்னிடம் இப்போது பதில் இல்லை. எனினும் நாங்கள் இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறோம். அதற்கேற்ற கதைகளை கேட்டுவருகிறோம். சரியான கதை வரும் வரை காத்திருப்போம்" என்றும் தெரிவித்துள்ளார்.