4 தங்கம், 2 வெண்கலம் - துப்பாக்கிச் சுடுதலில் 6 பதக்கங்கள் வென்ற அஜித் அணி

By செய்திப்பிரிவு

துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 4 தங்கம், 2 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை நடிகர் அஜித் வென்றுள்ளார். இதையடுத்து ட்விட்டரில் 'வெற்றி நாயகன் அஜித்' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

47-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 25-ம் தேதி திருச்சி கே.கே.நகரில் உள்ள ரைபிள் கிளப்பில் தொடங்கியது. பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கிச்சுடும் போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து 1,300-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். பிஸ்டல் துப்பாக்கிச் சுடுவதற்கான போட்டிகள் 28-ம் தேதி நடைபெற்றது.

ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 16, 19, 21 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கும், 21 முதல் 45 வயது, 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித் அடிப்படையில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆர்வம் மிக்கவர் என்பதால், அவர் கடந்த 27-ம் தேதி துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்திருந்தார். அவரைக்காண ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அன்று இரவு அவர் ரசிகர்களை சந்திக்கும் வீடியோ வைரலாக பரவியது. இந்நிலையில், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் உள்ளிட்ட பிரிவுகளில் 4 தங்கம், 2 வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது அஜித் அணி. வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பரிசு வழங்கப்படுகிறது. இதையடுத்து ட்விட்டரில் 'வெற்றிநாயகன்அஜித்' என ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE