‘தி லெஜண்ட்’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட ஐகோர்ட் தடை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்து இன்று வெளியாகியுள்ள "தி லெஜண்ட்" திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பாடி மற்றும் தியாகராயநகர் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் அருள் சரவணன். இவரது சொந்த தயாரிப்பில், அவர் கதாநாயகனாக நடித்துள்ள படம் "தி லெஜண்ட்" இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியாகியுள்ள இப்படத்தில் ஊர்வசி ராவ்டேலா, விவேக், சுமன், நாசர், விஜயகுமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி ‘தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.ரவீந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "தி லெஜண்ட்" திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடக்கூடாது என 1,262 இணையதளங்களுக்கும், பிஎஸ்என்எல், ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா, வோடபோன் உள்ளிட்ட 29 இணையதள சேவை நிறுவனங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE