சிரமப்பட்டு ஒற்றை காலுடன் நடனமாடியிருக்கிறேன் - பொய்கால்குதிரை படம் குறித்து பிரபுதேவா 

By செய்திப்பிரிவு

மிகவும் சிரமப்பட்டு ஒற்றை காலுடன் நடனமாடியிருக்கிறேன் என நடிகர் பிரபு தேவா 'பொய்கால்குதிரை' படம் குறித்து பேசியுள்ளார்.

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பொய்க்கால் குதிரை’. பிரபுதேவா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், வரலட்சுமி சரத்குமார், ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசை அமைத்துள்ளார்.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இவர், இதற்கு முன், ‘ஹர ஹர மகாதேவகி’, இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கியுள்ளார்.

நடிகர் பிரபுதேவா பேசுகையில், '' இந்தப் படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கும் சதீஷ், 'ஜூன் போனால் ஜூலை..' எனும் பாடலில் எனது சகோதரருடன் ஆடி இருப்பார். அப்போதே அவருடைய உற்சாகமான நடனத்தை கண்டு ரசித்தேன். இந்தப் படத்தில் ஒற்றைக்காலுடன் நடனமாட வேண்டியதிருந்தது.

சதீஷ் இதனை நன்றாக வடிவமைத்திருந்தார். அவருடைய உதவியாளர்கள் நன்கு பயிற்சி எடுத்து, என்னை விட நன்றாக ஆடினார்கள். நாங்கள் ஏழு மாதத்திற்கு ஒரு முறை பாடல் காட்சியில் வரும்போது நடனமாடுகிறோம். மிகவும் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து நடனமாடியிருக்கிறேன். நடன இயக்குநரின் கனவை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.

படத்தில் ஒற்றைக்காலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்த போது எந்த சிரமமும் இல்லை . சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி, ஒவ்வொரு காட்சியையும் எளிதாகவும், விரைவாகவும், நேர்த்தியாகவும் படமாக்கினார். அவருடைய தந்தையுடன் உதவியாளராக பணியாற்றிய அவருக்கு அனுபவம் கை கொடுத்தது.நடிகை வரலட்சுமி அழகான பெண் மட்டுமல்ல. திறமையான நடிகையும் கூட. சிலர் திரையில் நடிக்கும் போது தான் அவரது திறமை வெளிபடும். ஆனால் நடிகை வரலட்சுமி திரையில் தோன்றினால் போதும். ரசிகர்களை கவர்ந்து விடுவார்.

''பொய்க்கால் குதிரை'' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE