பா.ரஞ்சித் - விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

By செய்திப்பிரிவு

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா' படங்களைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இன்று பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் பா.ரஞ்சித்துடன் முதன் முறையாக இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இணைகிறார். இன்று நடைபெற்ற விக்ரம் 61 படத்தின் பூஜையில் நடிகர்கள் சிவகுமார், விக்ரம், கலையரசன், ஜி.வி. பிரகாஷ், இயக்குனர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படம் குறித்து பா.ரஞ்சித் கூறுகையில், ''விக்ரமுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறேன். மக்களிடையேயும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். 19-ம் நூற்றாண்டில் கே.ஜி.எஃப்பில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட உள்ளது. அந்த மக்களின் வாழ்க்கையை பேசும் படமாக இது இருக்கும்.

படம் எடுப்பது மிகப்பெரிய சவால். எனக்கு மட்டுமில்லாமல், தொழில்நுட்ப குழுவுக்கும் இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஜி.வி.பிரகாஷூடன் முதன்முறையாக இணைகிறேன். மற்ற நடிகர் நடிகைகளின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்'' என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE