ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் ரக்‌ஷன் - பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்

By செய்திப்பிரிவு

குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக புகழ்பெற்ற ரக்‌ஷன், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் துல்கர் சல்மானின் நண்பனாக நடித்திருந்தார். அது நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் இப்போது நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

பெயரிடப்படாத படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இன்று பூஜையுடன் துவங்கியது. பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். யோகேந்திரன் என்பவர் இயக்க உள்ளார். உணர்வுபூர்மான காதல், நட்பு, உறவுகளை மையமாக கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுது போக்கு திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

கலக்கபோவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க்ஸ்டர் ராகுல், மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு, மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார். கவிஞர் தாமரை பாடல் வரிகளை எழுதுகிறார். கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய, ‘அர்ஜூன் ரெட்டி’ படப்புகழ் செஷாங் மாலி படத்தொகுப்பு பணிகளை செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் படக்குழு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE