“இழப்பதற்கு ஒன்றுமில்லை” - ‘காளி’ பட போஸ்டர் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை

By செய்திப்பிரிவு

'காளி' படத்தின் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை விளக்கம் கொடுத்துள்ளார்.

'மாடத்தி', 'செங்கடல்' போன்ற படங்களால் கவனம் பெற்றவர் சுயாதீன திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை. அவரது படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளன.

அவர் தற்போது 'காளி' என்ற நிகழ்த்துக் கலை ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் லீனா மணிமேகலை 'காளி' கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2-ம் தேதி பதிவிட்டிருந்தார்.

அந்த போஸ்டரில், 'காளி' வேடம் தரித்த பெண் ஒருவர் புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான எல்ஜிபிடி கொடியையும் அவர் பிடித்துக்கொண்டிருப்பது போல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இது, இந்துக் கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ட்விட்டரில் லீனா மணிமேகலைக்கு எதிரான ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது. இதைத்தொடர்ந்து வினீத் ஜிண்டால் என்ற வழக்கறிஞர், லீலா மணிமேகலை மீது டெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர்தான் என்றால் தரலாம்'' என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அவர், ட்விட்டரில் டிரெண்டான ஹேஷ்டேக் குறித்து, ''ஒரு மாலைப்பொழுது, டொரண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள்தான் படம். படத்தைப் பார்த்தா “arrest leena manimekalai” hashtag போடாம “love you leena manimekalai” hashtag போடுவாங்க'' என்று தெரிவித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE