ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க ரசிகர் மன்றங்களை மட்டுமே இன்று பிரபலங்கள் நம்புவதில்லை. சமூக வலைதளங்களின் வளர்ச்சியைத் தொடர்ந்து, அங்கும் தங்களக்கான இடத்தை அமைத்துக் கொண்டு, முன்பை விட தீவிரமாகப், பல பிரபலங்கள் ரசிகர்களோடு நேரடியாகத் தொடர்பில் உள்ளனர்.
சமூக வலைதளத்தைப் பயன்படுத்தாத பாலிவுட் பிரபலமே இல்லை என்று கூறலாம். தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களில் பலர் மெதுவாக சமூக வலைதளங்களில் தங்களுக்கான பிரத்தியேக கணக்குகளை ஆரம்பித்து மக்களோடு உரையாடியும், தங்களது எண்ணங்களைப் பகிர்ந்தும் வருகின்றனர்.
அந்த வரிசையில் இப்போது பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ர்மணியம் ஃபேஸ்புக்கில் நுழைந்துள்ளார். இந்தியா முழுவதும் எண்ணற்ற ரசிகர்ர்களைக் கொண்டுள்ள எஸ்.பி.பி-யின் பக்கத்தை, இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் விரும்பியுள்ளனர்.
எஸ்.பி.பி-யின் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட இன்னும் பல பக்கங்கள் ஃபேஸ்புக்கில் உலவுவதால், இதுதான் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் என்று, அவரே பேசி, வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். பல இந்திய மொழிகளில், 40,000 பாடல்களுக்கு மேல் பாடிய ஒரே பாடகர் எஸ்.பி.பி என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது ஃபேஸ்புக் பக்க இணைப்பு - >https://www.facebook.com/SPB