'விக்ரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் நேரில் அழைத்து நடிகர் சிரஞ்சீவி விருந்து வைத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது 'விக்ரம்' திரைப்படம். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் நிரம்புகின்றன. 'விக்ரம்' படம் வெளியான முதல் நாள் இந்தியாவில் மட்டும் ரூ.32 கோடியை வசூலித்தது; உலக அளவில் ரூ.48.68 கோடியை எட்டியது. பின்னர், படம் வெளியாகி 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில், உலக அளவில் படம் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி 'விக்ரம்' பட வெற்றியை கொண்டாடும் வகையில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை தனது இல்லத்துக்கு அழைத்து இரவு விருந்து வைத்து சிறப்பித்துள்ளார். இந்த விருந்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானும் பங்கேற்றிருந்தார். இதனையடுத்து கமல், சல்மான் மற்றும் லோகேஷ் உடன் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களை ட்விட்டரில் பகிர்ந்த சிரஞ்சீவி, ''அற்புதமான 'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு மட்டற்ற மகிழ்ச்சி, இதற்காக என் அன்பான நண்பர் கமல் ஹாசனை பாசத்திற்குரிய சல்மான் கான், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோருடன் இணைந்து கொண்டாடி கௌவுரவித்தேன். தீவிரமான த்ரில்லர் படம் விக்ரம். அனைவருக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்'' என பதிவிட்டுள்ளார்.
» தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை சுற்றும் சர்ச்சை
» சுசீந்திரன் - விஜய் ஆண்டனியின் 'வள்ளி மயில்' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு