“ஒரு சொட்டு கண்ணீர் மட்டும்...” - கருணாநிதியை கடைசியாக சந்தித்த அனுபவம் பகிரும் நடிகர் சிவகுமார்

By செய்திப்பிரிவு

"கண்ணில் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. அப்படியே அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டு வந்துவிட்டேன். அதுதான் நான் அவரை கடைசியா பார்த்தது...'' என முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தனது கடைசி சந்திப்புக்கு குறித்த நினைவுகளை நடிகர் சிவகுமார் பகிர்ந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவுகளை பகிர்ந்துள்ள நடிகர் சிவக்குமார், ''கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி அன்று நான் கருணாநிதியை சந்தித்தேன். அவர் நினைவு இழந்து படுக்கையில் இருந்த தருவாயில், நான் அவரை சந்திக்க சென்றிருந்தேன்.

அப்போது தமிழும், செல்வியும் என்னை அவரிடம் அழைத்து சென்று ''சிவக்குமார் அண்ணன் வந்திருக்கார் பாருங்க'' என்று கூறினார்கள். அவர் முகம் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை.

அப்போது, தமிழருவி மணியன் ''சிவாஜி எனும் தவப்புதல்வன்'' புத்தகம் எழுந்தியிருந்தார். அதில் இடம்பெற்ற மனோகரா படத்தின் தர்பார் காட்சியை டி.வி.யில் போட்டு, அவர் அருகில் சத்தம் அதிகமாக வைத்து அவரை அதை கேட்க வைக்கலாம் என யோசித்தோம். அந்தக் காட்சியை போட, அதன் வசனம் ''புருசோத்தமரே புரட்டு காலின் இருட்டு மொழியிலே'' என தொடங்கும் நீளமான அந்த உணர்ச்சிகரமான வசனத்தை 1.30 நிமிடம் போட்டோம்.

அவர் அருகே சென்று பார்த்தோம் முகத்தில் எந்த உணர்வும் இல்லை, நான் அருகில் சென்று பார்த்தேன்... மூக்கு விடைக்கல... உதடு துடிக்கல... ஆனா... கண்ணில் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. அப்படியே அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டு வந்துவிட்டேன். அதுதான் நான் அவரை கடைசியா பார்த்தது'' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE