80 வயதை தொடும் இளையராஜா: திருக்கடையூர் கோவிலில் சதாபிஷேகம்

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை : பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா, தனக்கு 80 வயது பூர்த்தி ஆவதையொட்டி, திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணா அபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து கடவுளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்நிலையில், இத்தகைய சிறப்புமிக்கக் கோயிலுக்கு பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா வருகை புரிந்தார். தனக்கு 80 வயது பூர்த்தி அடைவதை முன்னிட்டு, ஆயுள் விருத்தி ஹோம பூஜைகள் செய்வதற்காக நேற்று (30.5.2022) திருக்கடையூருக்கு வந்தவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோயில் கொடிமரத்தின் அருகே இளையராஜா கோ பூஜை, மற்றும் கஜ பூஜை செய்தார். தொடர்ந்து நூற்றுகால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மிருத்தியுஞ்சய ஹோமம், ஆயுஸ்ஹோமம், தன்வந்திரி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம் ஆகியவை நடைப்பெற்றன. இன்று காலையில குருபூஜை மற்றும் கனகாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன் மற்றும் அவரது குடும்பத்தினர், பிரபல நடிகர் பிரேம்ஜி, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE