செளந்தர்யா பற்றி கருத்து: ரசிகர்களுக்கு சிம்பு அறிவுரை

By ஸ்கிரீனன்

இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் தன்னைப் பற்றி கூறிய கருத்துகளுக்கு, திட்டித் தீர்த்த ரசிகர்களுக்கு சிம்பு அறிவுரை கூறியுள்ளார்.

'கோச்சடையான்' படத்தினை விளம்பரப்படுத்தும் விதமாக படம் உருவான விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விஜய் டி.வியின் 'காபி வித் டி.டி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.

அப்போது இந்த திரையுலகினரிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று டி.டி கேட்டுவிட்டு, ஒவ்வொரு நடிகர் பெயராக குறிப்பிட்டுக் கொண்டே வந்தார். அதில் சிம்புவின் பெயரை குறிப்பிடும் போது செளந்தயா "பாடாதே சிம்பு நிறுத்திடு. ப்ளீஸ்" என்று குறிப்பிட்டார்.

அந்த நிகழ்ச்சி நேற்றிரவு விஜய் டி.வியில் ஒளிபரப்பான உடன், செளந்தர்யாவின் ட்விட்டர் தளத்தில் சிம்பு ரசிகர்கள் திட்டி தீர்த்தார்கள்.

இச்செயல் குறித்து சிம்பு, "அனைவருக்குமே மற்றொருவரின் செயல் குறித்து விமர்சிக்க உரிமையுண்டு. ஆகையால், எனது ரசிகர்கள் இவ்வாறு செய்வது மிகவும் தவறு. மற்றவர்களையும் என்னை மதிப்பது போல மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதை ஆகியவற்றை நீங்கள் மற்றவரிகளிடமும் காட்ட வேண்டும், நன்றி. என்று தனது ட்விட்டர் தளத்தில் கூறினார்.

சிம்புவை பற்றி கூறிய கருத்து குறித்து செளந்தர்யா, " சிறுவயதில் இருந்தே எனக்கு சிம்பு நண்பர் தான். நான் விளையாட்டாக தான் கூறினேன். எங்களுக்குள் எவ்வித சண்டையும் இல்லை என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE