சுந்தர்.சி இயக்கிவரும் புதிய படத்தில் திவ்யதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அரண்மனை 3’. சுந்தர்.சி இயக்கி, தயாரித்த இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் சுந்தர்.சி.
முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் ஒரு கதையை உருவாக்கி, படபூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கினார் சுந்தர்.சி. முழுக்கதையுமே ஊட்டியில் நடைபெறுவது போன்று திட்டமிட்டுப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா சர்மா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தினை சுந்தர்.சியின் அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
தற்போது, இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் திவ்யதர்ஷினி. இதனை தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டுத் திரும்பப் படக்குழு திட்டமிட்டுள்ளது.