ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது. திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்து விட்டனர். சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜாவும் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனது பதிவில் “முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் தடுப்பூசிப் போட்டுக் கொண்டு முகக்கவசம் அணியுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.