வேலுநாச்சியரின் வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக்க முயற்சிக்கிறேன்: சுசி கணேசன்

By செய்திப்பிரிவு

வேலுநாச்சியரின் வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளதாக இயக்குநர் சுசி கணேசன் கூறியுள்ளார்.

1730-ஆம் ஆண்டு ராமநாதபுரம் அடுத்த சக்கந்தி என்ற ஊரில் பிறந்தவர் வேலு நாச்சியார். சிறு வயதிலேயே துணிச்சலும் எதற்கும் அஞ்ஞாத நெஞ்சுரமும் கொண்டிருந்தவர். சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரை 16-வது வயதில் மணந்து, பட்டத்து ராணியானார். 1780-ல் ஆங்கிலேயருக்கு எதிராக மும்முனைத் தாக்குதல் நடத்தி வெற்றி வாகை சூடினார். வேலு நாச்சியாரின் பிறந்தநாளான நேற்று (ஜன. 03) அன்று பிரதமர் மோடி உட்பல பல்வேறு அரசியல் தலைவர்கள், வீரமங்கை வேலு நாச்சியாரை நினைவுகூர்ந்திருந்தனர்.

இந்நிலையில், வீர மங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவுள்ளதாக இயக்குநர் சுசி கணேசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து சுசி கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய வீர மகா ராணி வேலுநாச்சியரின் வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியை இந்நாளில் பெருமையோடு அறிவிக்கிறேன்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் வீரமங்கை வேலு நாச்சியார் அம்மையாரை நினைவுகூர்ந்து வாழ்த்தியதில் படைப்பாளியான என் பேனா முனைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் மூலம் ஆங்கிலேயர்களோடுபோரிட்டு, வென்ற முதலும் கடைசியுமான வீர தமிழச்சியின் மாவீரம் எத்தகையது என்பதை இன்றைய தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்ப்பதோடு, உலகமே கொண்டாட வைத்துவிடலாம் என்கிற நம்பிக்கை பிறக்கிறது" என்று சுசி கணேசன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE