விஷாலின் ‘லத்தி’ இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

விஷால் நடித்துவரும் ‘லத்தி’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

விஷால், ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'எனிமி'. ஆனந்த் ஷங்கர் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து 'அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வீரமே வாகை சூடும்' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷால். இப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஏ.வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘லத்தி’ என்ற படத்தில் விஷால் கவனம் செலுத்தி வருகிறார். இது விஷால் நடிக்கும் 32-வது படமாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது. இதில் விஷாலுக்கு நாயகியாக சுனைனா நடிக்கிறார். பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'லத்தி' படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், இசையமைப்பாளராக சாம் சி.எஸ். பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று (டிச.13) அதிகாலையுடன் நிறைவடைந்தது. கடைசி நாள் படப்பிடிப்பைத் தொடர்ந்து 24 மணி நேரம் நடத்தி முடித்துள்ளது படக்குழு. விரைவில் ‘லத்தி’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE