‘அண்ணாத்த’ வெற்றி அண்ணாந்து பார்க்க வைக்கும் - இயக்குநர் பேரரசு பகிர்வு

By செய்திப்பிரிவு

‘அண்ணாத்த’ படம் குறித்து சிலர் வன்மத்தோடு விமர்சனம் செய்வது வேதனையைத் தருவதாக இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் ரஜினியுடன் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியானது.

ரஜினியின் 168வது படமான 'அண்ணாத்த' படம் விமர்சன ரீதியாகக் கடும் எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது. பலரும் அரதப் பழைய காட்சிகளைக் கொண்ட படம் என்று தங்களுடைய விமர்சனத்தில் குறிப்பிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ‘அண்ணாத்த’ படம் குறித்து சிலர் வன்மத்தோடு விமர்சனம் செய்வது வேதனையைத் தருவதாக இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

திரைப்படத்தில் நிறைகுறை இருக்கத்தான் செய்யும். அதை தேசத்துரோக அளவுக்கு வன்மத்தோடும், வக்கிரத்தோடும், நாகரிகமற்ற முறையிலும் சிலர் விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது. சில யூட்யூப் சேனல் விமர்சனங்கள் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டன. இருந்தும் ‘அண்ணாத்த’வெற்றி அண்ணாந்து பார்க்க வைக்கும்.

இவ்வாறு பேரரசு கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE