ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரண்டு தொடர்கள் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சன் டிவி, விஜய் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பாகும் தொடர்களைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதில் குறிப்பாக 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' மற்றும் 'சத்யா' ஆகிய தொடர்களுக்குப் பெரியளவில் ரசிகர்கள் உள்ளனர்.
2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி'. இதில் அஸ்வினி, புவி அரசு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 1000 பகுதிகளுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது.
அதே போல் 2019-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'சத்யா'. இதில் ஆயிஷா, விஷ்ணு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 800 பகுதிகளுக்கு மேல் இந்தத் தொடர் ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த இரண்டு தொடர்களும் நிறுத்தப்படுவதாக திடீரென்று அறிவித்துள்ளது ஜீ தமிழ் நிர்வாகம். இந்த இரண்டு தொடரின் கடைசி அத்தியாயங்களும் அக்டோபர் 24-ம் தேதி ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜீ தமிழ் நிர்வாகம் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"அன்பான நேயர்களுக்கு வணக்கம். உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி. எதிர்பாராத காரணங்களால், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி மற்றும் சத்யா ஆகிய இரண்டு தொடர்கள் வரும் வாரங்களில் இருந்து நிறுத்த உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு தொடர்களின் கடைசி அத்தியாயங்கள் அக்டோபர் 24, ஞாயிறு அன்று ஒளிபரப்பப்படும். தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி"
இவ்வாறு ஜீ தமிழ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.