'ஜெய் பீம்' தணிக்கைப் பணிகள் நிறைவு

By செய்திப்பிரிவு

சூர்யா தயாரித்து, நடித்துள்ள 'ஜெய் பீம்' படத்தின் தணிக்கைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

நாயகனாக நடிப்பது மட்டுமன்றி, தொடர்ச்சியாகத் தனது 2டி நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறார் சூர்யா. சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' திரைப்படம் இவருடைய தயாரிப்பில் உருவானதுதான்.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 14-ம் தேதி இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'உடன்பிறப்பே' படம் வெளியாகவுள்ளது. இதற்குப் பிறகு தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெய் பீம்' படம் வெளியாகவுள்ளது.

இதில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தற்போது தணிக்கைப் பணிகள் முடிந்துள்ளன. இதற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சூர்யா தயாரிப்பில் வெளியான படங்களில் முதல் 'ஏ' சான்றிதழ் பெற்ற படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் உள்ள சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இதில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், லிஜோமோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE