'மாமனிதன்' கதையைக் கேட்டு வடிவேலு, பிரபுதேவா, மம்மூட்டி சொன்ன பதில்: சீனுராமசாமி பகிர்வு

By செய்திப்பிரிவு

'மாமனிதன்' கதையைக் கேட்டுவிட்டு வடிவேலு என்ன சொன்னார் என்பதை சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. யுவன் தயாரித்து வரும் இந்தப் படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பிலேயே இருக்கிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

தற்போது இந்தப் படத்தின் வெளியீடு குறித்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆகையால், 'மாமனிதன்' கதையில் முதலில் யாரெல்லாம் நடிக்கவிருந்தார்கள் என்பதைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் சீனுராமசாமி.

இது தொடர்பாக சீனுராமசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

" 'மாமனிதன்' படத்தின் கதையை முதலில் சகோதரர் வடிவேலு கேட்டு என்னை வாழ்த்தி "மேட்டர் ஹெவியா இருக்கே" என்றார். பிரபுதேவா கண்கலங்கினார். இந்திப் படத்தால் அவர் வர இயலவில்லை. மம்மூட்டி இசைந்தார். ஆனால், ஈடேறவில்லை. முடிவில் வந்தது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. மிக அருகில் நல்ல சேதி".

இவ்வாறு சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'இடிமுழக்கம்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சீனுராமசாமி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE