ராம்சரண் படம் தொடர்பாக மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
கமல் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் ஷங்கர். அந்தப் படத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது 'இந்தியன் 2' பணிகளுக்கு முன்பாக ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பணிகளுக்காக ஹைதராபாத்தில் இருக்கிறார் ஷங்கர். தில் ராஜு தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். தமன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.
இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். இதில்தான் சிக்கலே ஏற்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த செல்லமுத்து எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் கதை தன்னுடையது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எழுத்தாளர் சங்கம். இருவருடைய விளக்கத்துக்குப் பிறகே, இறுதி முடிவை எழுத்தாளர் சங்கம் எடுக்கவுள்ளது.