வீட்டில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரகாஷ்ராஜுக்கு கையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது.
இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், "மீண்டு வந்துவிட்டேன். அறுவை சிகிச்சை வெற்றி. அன்பு நன்பர் குருவாரெட்டிக்கு நன்றிகள். என் மீது அன்பைப் பொழிந்த ரசிகர்களுக்கும் நன்றி. உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி. விரைவில் பணிக்குத் திரும்புவேன்" என்று பதிவிட்டுள்ளார்.
கூடவே மருத்துவமனை படுக்கையில் கையில் கட்டுடன் படுத்திருக்கும் செல்ஃபி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
அவர் சீக்கிரம் பூரண குணம் பெற வேண்டி ட்விட்டராட்டிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வீட்டில் நடந்த விபத்து:
தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். சமீபத்தில் சென்னையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார்.
நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 9) கோவளத்தில் உள்ள வீட்டில் சறுக்கி, கீழே விழுந்துவிட்டார் பிரகாஷ்ராஜ். அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளது.