'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போட்டியாக 'சர்வைவர்' - தொகுப்பாளராகும் அர்ஜுன்?

By செய்திப்பிரிவு

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போட்டியாக 'சர்வைவர்' என்ற நிகழ்ச்சியைத் தொடங்கவுள்ளது ஜீ தமிழ்.

விஜய் தொலைக்காட்சியில் வருடந்தோறும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'பிக் பாஸ்'. கமல் தொகுப்பாளராகப் பணிபுரிந்து வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீஸன்கள் முடிந்துள்ளன. விரைவில் 5-வது சீஸனைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறது.

தற்போது இந்த நிகழ்ச்சிக்குப் போட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கவுள்ளது. இதில், போட்டியாளர்களைத் தீவுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அங்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதில் போட்டியாளர்கள் இயற்கையின் ஆற்றலுக்கு எதிராகத் தங்களது திறனை வெளிப்படுத்திப் போராட வேண்டும். உடல் வெப்பத்திற்காக தீ மூட்டுவது, அல்லது இயற்கைப் பொருட்களைக் கொண்டு ஒரு குடில் அமைப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் தொடங்கி, உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியங்களைத் தேடிப் பெறுவது உள்ளிட்ட சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

இந்தச் சூழலை மேலும் கடுமையாக்கும் விதமாகப் போட்டியாளர்களுக்குப் பல்வேறு விதமான சவால்கள் கொடுக்கப்படும். ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டு அதற்கான பரிசுகளை வென்று, போட்டியிலிருந்து வெளியேற்றப்படாமல் தங்களைக் காத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு போட்டியாளரின் மன மற்றும் உடல் வலிமையை அனைத்து விதங்களிலும் சோதித்து, மனிதனின் எல்லாவிதமான சவால்களை எதிர்கொள்ளும் திறனைக் கண்டறிவதற்கே இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அர்ஜுன் அறிமுகமாகவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தனது உடலமைப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் அர்ஜுன், இந்த நிகழ்ச்சிக்குத் தகுதியானவர் என்பதால் அவரைத் தேர்வு செய்திருப்பதாகத் தெரிகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக நந்தா, விக்ராந்த், விஜயலட்சுமி, வி.ஜே.பார்வதி, இந்திரஜா ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்குத் தகுந்தாற்போல் அவர்களுடைய இதர பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக அறிவிப்பு வெளியாகிவிட்டாலும், இன்னும் போட்டியாளர்கள், தொகுப்பாளர் உள்ளிட்ட விவரங்களைத் தொலைக்காட்சி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE