'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது ஏன் என்று வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியிலிருந்து விலகினார் வனிதா விஜயகுமார். தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்தப்பட்டதாகவும் நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். (வனிதா விஜயகுமாரின் அறிக்கையை முழுமையாக படிக்க.. CLICK HERE) இது சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தையும் உண்டாக்கியது.
சமூக வலைதளத்தில் பலரும் வனிதா விஜயகுமார் விலகியதற்கு ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்று கருத்து தெரிவித்து வந்தார்கள். இது தொடர்பாக பதில் கூற விரும்பவில்லை என்று ரம்யா கிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 'சிவப்பு மனிதர்கள்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வனிதா விஜயகுமார் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:
"விஜய் டிவிக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சினையுமே இல்லை. பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை சொன்ன விஷயங்களில் சில எனக்குப் பிடிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அனைவருமே ஸ்டார்களாகத் தான் உள்ளே சென்றோம். அனைவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான். அதற்குரிய மரியாதை அனைவருக்குமே கொடுத்து தான் ஆகவேண்டும். அது கொஞ்சம் தளர்வானதில் எனக்கு ஈடுபாடு இல்லை. அதனால் தான் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டேன்.
மாதர் சங்கம் எந்தப் பெண்ணிற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் பார்த்துள்ளேன், நிறைய போராடியுள்ளேன். எந்தவொரு மாதர் சங்கமும் எனக்கு சப்போர்ட் செய்யவில்லை. தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் விளம்பரத்துக்காக சப்போர்ட் செய்கிறார்கள்.
சமூக வலைதளத்தில் நிறையத் தவறுகள் நடக்கிறது என்பது உண்மை தான். தனிப்பட்ட விஷயங்களில் தான் தவறாகப் பேசுகிறார்கள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு நின்றால், யார் உன் புருஷன் என்று கேட்கிறார்கள். அனைவருமே நிறையச் சுதந்திரம் கொடுத்துவிட்டது மாதிரி எடுத்துக் கொள்கிறார்கள். அந்தக் கருத்துகளை எல்லாம் பார்த்து வருந்தத் தொடங்கினால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது"
இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.