'கைதி' பட வழக்கு தொடர்பான செய்திகளுக்குத் தயாரிப்பு நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. விரைவில் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. மேலும், 'கைதி 2' படமும் உருவாகவுள்ளது.
இதனிடையே, கேரளாவின் கொல்லம் மாவட்ட நீதிமன்றத்தில் ராஜீவ் ரஞ்சன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், 2007-ம் ஆண்டு தனக்குப் புழல் சிறையில் நேர்ந்த சம்பவங்களைத் தொகுத்துக் கதையாக உருவாக்கி, எஸ்.ஆர்.பிரபுவிடம் தெரிவித்ததாகவும், அது அவருக்குப் பிடித்துவிடவே 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்குப் பிறகு எஸ்.ஆர்.பிரபு அழைக்கவே இல்லை என்றும், தான் கூறிய கதையின் 2-ம் பாதியை அப்படியே 'கைதி' படத்தில் வைத்துப் படமாக்கி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், இதனால் தனக்கு நஷ்ட ஈடு வேண்டும் எனவும் மனுவில் ராஜீவ் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
» ப்ரூஸ் லீ குறித்த டாரண்டினோவின் சர்ச்சை கருத்து: பதிலடி கொடுத்த ஷேனன் லீ
» மறைந்த நடன இயக்குநர் சரோஜ் கான் பயோபிக் திரைப்படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி எஸ்.ஆர்.பிரபுவிற்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார். மேலும், இரண்டாம் பாகத்தை உருவாக்கவும் தடை விதித்தார்.
இந்த வழக்கு தொடர்பான செய்திகள், தமிழ்த் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், 'கைதி' படக்குழுவினரோ இது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் இருந்தனர். தற்போது, 'கைதி' பட வழக்கு தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக 'கைதி' தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'கைதி' திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க, கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகச் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது சம்பந்தமாக ஊடக நண்பர்கள் எங்களைத் தொடர்புகொண்டு கருத்துகள் கேட்டு வருகின்றனர்.
எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப் பற்றிய விவரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதே சமயம் 'கைதி' சம்பந்தப்பட்ட ஊடகச் செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல், இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்".
இவ்வாறு டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.