'வலிமை' அப்டேட்டுக்காகக் காத்திருக்கிறேன்: வெங்கட் பிரபு

By செய்திப்பிரிவு

'வலிமை' அப்டேட்டுக்குக் காத்திருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சி, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காகத் தயாராகி வருகிறது படக்குழு. இந்நிலையில் சென்னையில் 'மூங்கில்' என்ற பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் வெங்கட் பிரபு.

அப்போது பத்திரிகையாளர்கள் 'மாநாடு' படப்பிடிப்பு குறித்துக் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு வெங்கட் பிரபு கூறியிருப்பதாவது:

" 'மாநாடு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது. மற்ற அனைத்துக் காட்சிகளையும் முடித்துவிட்டோம். இன்னும் மாநாடு போன்ற செட்டில் கூட்டம் அதிகமாக இருக்கும் காட்சிகள் மட்டுமே பாக்கியுள்ளது. 12-15 நாட்கள்தான் இன்னும் படப்பிடிப்பு உள்ளது. அதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது முடிவடைந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும்".

இவ்வாறு வெங்கட் பிரபு பேசினார்.

பின்பு, "தல குறித்த அப்டேட் ஏதாவது" என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "வலிமை அப்டேட்டுக்கு நானும் உங்களை மாதிரியே வெயிட்டிங்" என்று பதிலளித்துள்ளார் வெங்கட் பிரபு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE