விருமாண்டி இயக்கத்தில் சசிகுமார்: அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

விருமாண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவுள்ளார்.

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'க/பெ ரணசிங்கம்'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் டிடிஹெச் மற்றும் ஓடிடி தளம் ஆகியவற்றில் வெளியானது.

இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து விருமாண்டி தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார்.

இன்று (ஜனவரி 18) விருமாண்டியின் அடுத்த படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'க/பெ ரணசிங்கம்' படத்தைப் போலவே இதுவும் ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் தான் உருவாக்கியுள்ளார். தற்போது பல்வேறு முன்னணி நாயகர்களின் திரைப்பட வசூலைக் கொண்டாடி வருகிறோம். அதற்கு எல்லாம் முன்னோட்டமாக 1975-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறார் விருமாண்டி.

இந்தக் கதையைக் கேட்டவுடனே, நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் சசிகுமார். ஏப்ரலிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர்.விஸ்வநாதன் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பாடலாசிரியராக வைரமுத்து, ஒளிப்பதிவாளராக என்.கே.ஏகாம்பரம், எடிட்டராக டி.சிவாநாதீஸ்வரன், இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிகிறார்கள்.

ஏப்ரலில் படப்பிடிப்பைத் தொடங்கி, இந்த ஆண்டுக்குள் படத்தை வெளிக்கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE