தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன்பு நேற்றிரவு முதல் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்குத் தொலைபேசி வாயிலாகத் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நலத்திட்ட உதவிகள், அன்னதானம் என ரசிகர்களும் ரஜினியின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஜினி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"இன்று என்னை வாழ்த்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய மற்றும் மாநில அரசியல் நண்பர்கள், என் நலம் விரும்பிகள், சக திரைக் கலைஞர்கள், ஊடக நண்பர்கள், உற்சாகத்துடன் என் பிறந்த நாளைக் கொண்டாடி வரும் உலகெங்கிலும் உள்ள என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்".
இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவருக்குத் தனிப்பட்ட முறையில், தனது ட்விட்டர் பதிவில் ரஜினி நன்றி தெரிவித்தார்.